உலகில் தற்போது தான் இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு கொரோனா என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் இவற்றின் உருமாறும் தன்மை காரணமாக வெவ்வேறு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றார் போல் தன்னுடைய நோயின் தன்மையையும் மாற்றி கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்கள்.
வைரஸ் புதிதாக உருவெடுத்து அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த "சார்ஸ்- கொரோனா வைரஸ் 2" மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வகை வைரஸ், இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் மக்கள் கவலைக் கொள்ள அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.
இந்தியாவில் மிக மோசமான இரண்டாம் அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் தற்பொழுது மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது. புதிய மாற்றம் சார்ஸ்-கொரோனா வைரஸ் 2ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார். புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதும் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக தற்பொழுதும் உள்ளது.