புதுச்சேரி : புதிய உச்சமாக ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி மேலும் 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.!

புதுச்சேரி : புதிய உச்சமாக ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி மேலும் 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.!

Update: 2020-07-17 06:05 GMT

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 774 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாத ஆண் குழந்தை தொற்றுக்கு உயிரிழந்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தகவல் தெரிவித்தபோது புதுச்சேரியில் அதிகப்பட்டசமாக 1079 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 147 பேருக்கு (13.6 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 60 பேர் ஜிப்மரிலும், 12 பேர் காரைக்காலிலம், 7 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தை கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி காலை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு தீவிரமாகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 'பாசிட்டிவ்' என்று வந்துள்ளது. இதனால் இளம் வயது குழந்தைகளும், வயதான முதியவர்களும் எளிதில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று தெளிவாக தெரிகிறது. ஆகவே தேவையின்றி ஆண்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.


உயிரிழப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகளவு இருக்கிறது. ஆகவே மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து செல்லவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் 379 பேர், ஜிப்மரில் 177 பேர், கோவிட் கேர் சென்டரில் 117 பேர், காரைக்காலில் 67 பேர், ஏனாமில் 33 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 30 பேர், ஜிப்மரில் 14 பேர் கோவிட் கேர் சென்டரில் 13 பேர், ஏனாமில் ஒருவர் என 58 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.


இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 947 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 916 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 907 பரிசோதனைகள் 'நெகடிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 270 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது என்றார். 

Similar News