தவறுகளைத் திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம் - நியூஸ்18 தமிழ் செய்தித் தொலைக்காட்சி அறிக்கை!

தவறுகளைத் திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம் - நியூஸ்18 தமிழ் செய்தித் தொலைக்காட்சி அறிக்கை!

Update: 2020-07-21 02:27 GMT

பல விதங்களிலும் ஒரு சாராருக்கு ஆதரவாகவும் மற்றொரு சாராரை காரணமின்றி வில்லனாக சித்தரிக்கும் செய்திகள், நிகழ்ச்சிகளை வெளியிடுவதை தமிழக செய்தி ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன‌. இதில் பெரும்பாலான ஊடகங்களும் அவற்றில் பணிபுரியும் செய்தியாளர்களும் தி.மு.க சார்பு மற்றும் இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் தற்போது அதிக அளவு பேசப்படுகிறது.

அந்த விதத்தில் சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஹசீப் முகமது மற்றும் தலைமை பொறுப்பாசிரியர் குணசேகரன் ஆகியோர் எவ்வாறு தி.மு.கவுக்கு ஆதரவாகவும் மாநில மற்றும் மத்திய ஆளும்‌ அரசுகளுக்கு எதிராகவும் நடந்து கொள்வதோடு இந்து எதிர்ப்பு கருத்துக்களை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பற்றி ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார்.

இதையடுத்து இவர்கள் இருவர் மீதும் ‌நியூஸ்18 நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுத்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஹசீப் முகமது அவர் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஆசிரியர் குணசேகரனின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து தி.மு.க தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொல்‌.திருமாவளவன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிட்டனர்‌.

இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி சேனலின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, "சமீப நாட்களாக தமிழகத்தில்‌ நடைபெறும்‌ அரசியல்‌ நிகழ்வுகள்‌ மூலம்‌ ஒரு தரப்பினர்‌ நியூஸ்‌ 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீது ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்‌. மற்றொரு தரப்பினர்‌, அவர்கள்‌ ஆதாயம்‌ பெறும்‌ வகையில்‌ தங்களுக்கு ஆதரவாக தொலைக்காட்சி இயங்குகிறது என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர்‌.

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில்‌ எமது தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும்‌, எதிராகவும்‌ இடம்பெறும்‌ கருத்துக்கள்‌ (ட்ரெண்டுகள்‌), தொலைக்காட்சி விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகின்றது என்பதற்கான சான்று.

அனைவரது தரப்பு விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, எங்களது அடிப்படை மதிப்பீடுகளை வலுப்படுத்த தயாராக இருக்கிறோம்‌. எங்களது தவறுகளை திருத்திக்கொள்ளவும்‌ நாங்கள்‌ தயக்கம்‌ காட்ட மாட்டோம்‌, தொழில்‌ நிபுணத்துவம்‌ பெற்றவர்கள்‌ தலைமையில்‌ இயங்கும்‌ நியூஸ்‌ 18 தமிழ்நாடு தொலைக்காட்சி எந்தவொரு பக்கச்‌ சார்புமின்றி அரசியல்‌ அவதூறு எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது.

இடது, வலது அல்லது மைய கருத்துக்கள்‌ என அனைத்துத்‌ தரப்பினரது பார்வையையும்‌ பாகுபாடின்றி வெளியிடுவது, செய்தியாக்கம்‌ செய்வது என்பதில்‌ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்‌."

நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சியைச் சுற்றி நடந்து வரும் சில விஷயங்களைப் பற்றி இலை மறைவு காயாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அதன் பணியாளர்கள் மீது உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, ஆம் என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எந்தக் காரணத்துக்காக எடுக்கப்பட்டன என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News