தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் 180 சதவீதமாக உயர்ந்துள்ளது - மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் 180 சதவீதமாக அதிகரித்து இருப்பது வேதனை தருகிறது என்றும் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கும் படியும் மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2022-11-23 07:30 GMT

மதுரை உலகநேரியை சேர்ந்த கே.ஆர் ராஜா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- குழந்தைகள் இந்த சமுதாயத்தின் மிகப்பெரிய சொத்து. பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் தான் குழந்தைகள் இயல்பாக இருக்கக்கூடிய இடங்கள். ஆனால் வறுமை, குடும்ப சூழ்நிலை உட்பட பல்வேறு காரணங்களால் ஏராளமானவர்கள் குழந்தை பருவத்திலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. 2020 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது கடந்த 2021 ஆம் ஆண்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பட்டாசு ஆலைகளுக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக 14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.


நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் தரப்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது.கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும், மாடுகள் ஆடுகள் மேய்க்கவும், விவசாய பணிகளிலும் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் இந்த முறை அதிகரித்துள்ளது.எனவே குழந்தைகள் சிறப்பு மறுவாழ்வு மையம் அமைத்து குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உரிய பயிற்சியும் அளித்து இழப்பீட்டுத்தொகையை தொகையை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்கள்.


இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நம் நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை மத்திய மாநில அரசுகள் முற்றிலும் ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் 180 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது என்றனர். பின்னர் இந்த வழக்கு குறித்து மதியம் மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வருகிற முப்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.





 


Similar News