ஒரு நாளைக்கு 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கும் திறனை எட்டிய இந்தியா - 15 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா முடிவை அறிவிக்கும் நுட்பம்!
ஒரு நாளைக்கு 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கும் திறனை எட்டிய இந்தியா - 15 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா முடிவை அறிவிக்கும் நுட்பம்!
கொரோனா நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி, அவசர சிகிச்சை வசதிகளை அளிப்பதற்கும், மருத்துவ சேவைகளுக்கு நியாயமான, வெளிப்படையான கட்டணத்தை உறுதி செய்வதற்கும், தாமாக முன்வந்து தனியார்துறை மருத்துவமனைகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன. கொவிட் நோயாளிகளுக்கு நியாயமான கட்டணம் மற்றும் தீவிர சிகிச்சை ஏற்பாடு செய்வது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் அந்த மாநிலங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளன.
தனியார் துறை மருத்துவமனைகளுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவும், கொவிட் நோயாளிகளுக்கு பொது மற்றும் தனியார் துறை சுகாதார வசதிகள் கிடைப்பதை கருத்தில் கொள்ளவும், மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இது நியாயமான, நல்ல தரமான சிகிச்சை கிடைக்க உதவும்.
நாட்டில் கொரோனா நோயாளிகளை கண்டறிவதற்கான பரிசோதனை திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கும் திறன் நம் நாட்டில் உள்ளது. இதுவரை 59,21,069 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,54,935 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது வரை 907 பரிசோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 659 அரசுத்துறை, 248 தனியார் துறையைச் சார்ந்தது.
கொரோனா பரிசோதனைக்கு PCR பரிசோதனை நல்ல தரமான முன்னணி சோதனையாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள 907 பரிசோதனைக் கூடங்களிலும், பரிசோதனைத் திறனை வலுப்படுத்த இவற்றை பயன்படுத்த முடியும். ஆனால், இதற்கு சிறப்பான பரிசோதனை வசதிகள் தேவைப்படுகின்றன. மேலும் இவை முடிய குறைந்தது 2-5 மணிநேரம் ஆகிறது.
TRUENAT மற்றும் CB NAAT பரிசோதனை முறைகளை பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று தொலை தூரப்பகுதிகளில் பயன்படுத்த முடியும். இந்த பரிசோதனையை, நம்பகத்தன்மை, துல்லியம் இழக்காமல் எளிதாக்க மற்றும் அதிகரிக்கும் முயற்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விரைவான எதிர்பொருள் கண்டறிதல் சோதனை (Rapid Antigen Detection Test) தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளது.