6,000 4ஜி டவர்கள் அமைக்க டி.சி.எஸ் நிறுவனத்துடன் 550 கோடி ஒப்பந்தம் செய்யும் பி.எஸ்.என்.எல்
இந்தியா முழுவதும் 6,000 4ஜி டவர்களை அமைக்க டி.சி.எஸ் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி ஒப்பந்தத்தை பி.எஸ்.என்.எல் வழங்குகிறது.
4G வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) 6,000 புதிய 4ஜி டவர்களை அமைக்க டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்திற்கு ரூ.550 கோடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்த அடிப்படையில் 4G டவர்களை அதிக வருவாய் ஈட்டக்கூடிய இடங்களிலும், உள்கட்டமைப்பு தயாராக இருக்கும் இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் எனவும், இந்தியா முழுவதும் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை மக்களவையில், "4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளது என்பதையும், இது இந்தியப் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "எங்கள் 4G நெட்வொர்க்கின் வளர்ச்சி உலகளவில் பாராட்டப்படுகிறது, மேலும் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நெட்வொர்க், முழு தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் கூடிய ரேடியோ நெட்வொர்க்கை கொண்டுள்ளது." பி.எஸ்.என்.எல்'லின் 4ஜி சேவைகள் பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி வருகிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் வணிக ரீதியான 4G சேவைகள் மற்றும் அதன் 5G நெட்வொர்க்கை ஆகஸ்ட் 2022 க்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4G சேவைகள் கிடைக்காததால், சமீபத்திய ஆண்டுகளில் BSNL நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை தனியார் நிறுவங்களிடம் பெருமளவு இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.