காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தங்கை மகன் மீது மேலும் ஒரு வழக்கு - ₹ 787 கோடி வங்கிக் கடன் மோசடி!
காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தங்கை மகன் மீது மேலும் ஒரு வழக்கு - ₹ 787 கோடி வங்கிக் கடன் மோசடி!
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு மற்றும் வங்கிக் கடன் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தின் தங்கை மகனான ரதுல் பூரி மீது தற்போது புதிதாக ஒரு வங்கிக் கடன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூரி குடும்பத்திற்கு சொந்தமான இடங்களிலும் மோசர் பேயர் சோலார் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று சோதனையிட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரதுல் பூரியின் மோசர் பேயர் நிறுவனம் ₹ 786 கோடி கடன் மோசடி செய்து விட்டதாக அளித்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பேர ஊழல் வழக்கு மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பதிவு செய்த ₹ 354 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட ரதுல் பூரி தற்போது ஜாமீனில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ வங்கி, எக்சிம் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளில் ₹ 787.25 கோடி அளவில் கடன் பெற்று அதை வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துதல், போலி பரிவர்த்தனைகள் மற்றும் போலியாக மதிப்பு உயர்த்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சட்டத்துக்கு புறம்பாக கையாண்டதாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, காசியாபாத், அன்னுபூர்(மத்திய பிரதேசம்) ஆகிய பகுதிகளில் உள்ள ரதுல் பூரியின் இடங்கள் மோசர் பேயர் நிறுவன கட்டிடம் மற்றும் அதன் இயக்குனர்களின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த சோதனைகளின் போது முக்கியமான ஆவணங்களும் டிஜிட்டல் சாட்சியங்களும் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ரதுல் பூரியின் தந்தை மற்றும் தாயார் ஆகியோரும் மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.