CEO பாதுகாப்புக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு ரூ.171 கோடி செலவு செய்யும் பேஸ்புக் நிறுவனம்!

Update: 2021-04-19 12:32 GMT

பேஸ்புக் CEO மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக, கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 23 மில்லியன் அமெரிக்கா டாலர்களை, பேஸ்புக் நிறுவனம் செலவு செய்துள்ளது. இந்திய மதிப்பில் 171 கோடி ரூபாய் ஆகும். சமூக வலைத்தளங்கள் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது பேஸ்புக் தான். அதன் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமாக இருப்பவர் மார்க் ஜுக்கர்பெர். இவர் ஆண்டு வருமானமாக வெறும் ஒரு டாலர் மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும், போனஸ் உள்ளிட்ட எந்த சலுகையையும் அவர் பெற்றுக் கொள்வதில்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 இந்நிலையில், அவரது பாதுகாப்பிற்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் மிகப்பெரிய தொகையை பேஸ்புக் நிறுவனம் செலவு செய்திருக்கிறது. சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்க்கின் தனிப்பட்ட பாதுகாப்புக்காவும் மற்றும் அவர் குடியிருக்கும் வீட்டின் பாதுகாப்பிற்காகவும் பேஸ்புக் செலவு செய்திருக்கிறது. மேலும் கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளதாக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


கொரோனா ஊரடங்கு காரணமாகவும், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாகவும் மார்க்கின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும், இதற்காக செலவு அதிகமானதாகவும் பேஸ்புக் தெரிவித்திருக்கிறது. மார்க் உலக பிரபலம் என்பதால், அவருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறது. பாதுகாப்புக்கு 171 கோடி செலவு அதுவும் ஒரு வருஷத்துக்கு மட்டும் தான் என்பது பல பேருடைய புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்துள்ளது.

Similar News