நதி நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு செயற்கை வறட்சியை உருவாக்கும் சீனா - அளவில்லா கம்யூனிஸ்ட் அட்டூழியங்கள்!
நதி நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு செயற்கை வறட்சியை உருவாக்கும் சீனா - அளவில்லா கம்யூனிஸ்ட் அட்டூழியங்கள்!
அமெரிக்கா-சீனா இடையேயான பனிப்போர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சீன விஷமத்தனத்தை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இதில் லேட்டஸ்ட் விஷயம் சீனா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாயும் மேகாங் நதி. சீனா மேகாங் நதி நீரை அணை கட்டி சேமித்து வைத்துக் கொண்டு பிற நாடுகளை நீராதாரத்திற்கு தவிக்கும் நிலையில் தள்ளுகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
மேகாங் நதி சீனாவில் மேல்நிலையிலும் லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாமில் கீழ்நிலையிலும் பாய்கிறது. அதாவது சீனாவிலிருந்து அதன் கீழே இருக்கும் இந்த தென் கிழக்கு ஆசிய நாடுகள் நோக்கிப் பாய்கிறது. நதியின் முன் பகுதி சீனாவில் பாய்வதால் இயற்கையாகவே சீனாவுக்கு அனுகூலமாக இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க நிதி உதவியுடன் Eyes on Earth Inc என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளில் கீழ்ப்பகுதி மேகாங் நதி தீர நாடுகளில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டதாக தெரிய வந்தது. மேகாங் நதியை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் இது பேரிடியாக அமைந்ததோடு ஆற்றும் படுகையில் இருக்கும் மணல் மேடுகள் வெளிப்படும் அளவுக்கு நீர் வரத்து குறைந்து விட்டது. இதற்கு நதியின் முற்பகுதியில் சீனா கட்டி வைத்துள்ள அணைக்கட்டுகள் தான் காரணம் என்று Eyes on Earth Inc ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேகாங் நதியில் சீனா அமைத்திருக்கும் 11 அணைகள் 47 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டவை என்று இந்த ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் போன்ற மேகாங் நதி தீரத்தை நம்பியுள்ள நாடுகளில் 70 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் சீனா மேகாங் நதி நீரை கட்டுப்படுத்தி சேமித்து வைத்துள்ளது.
விவசாயப் பொருளாதாரத்தை நம்பி இருக்கும் இந்த நாடுகளில் உள்ள 12 மில்லியன் குடும்பங்களில் 80% குடும்பங்கள் மேகாங் நதியைச் சார்ந்துள்ளன. அரிசியும் மீனும் தான் இவர்களது முக்கிய உணவே. மேகாங் என்ற பெயரே 'மே நம் காங்' என்பதன் சுருக்கம் தான். இதன் பொருள் 'நீராதாரத்தின் தாய்'. அதாவது காவிரி டெல்டா வாசிகள் 'காவிரித் தாய்' என்று அன்புடன் அழைப்பதைப் போல் மேகாங் நதி இந்த மக்களுக்கு அன்னையைப் போன்றது. எனவே இநாத நதி நீரைத் முறையற்ற வகையில் சேமித்து வைப்பதன் மூலம் தென்கிழக்கு ஆசிய மக்களின் வாழ்வாதாரங்களான அரிசி, மீன் மற்றும் நீரை சீனா பறித்து விட்டது என்றால் அதை மிகையாகாது.