"மதசார்பற்ற நாடு என்றாலும் இந்தியா தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான நாடு"- தப்பி ஓடிய இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்!
"மதசார்பற்ற நாடு என்றாலும் இந்தியா தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான நாடு"- தப்பி ஓடிய இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்!
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை தனது பேச்சுக்களின் மூலம் தீவிரவாத செயல்களுக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்படும் இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக், தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி மலேசியாவில் வசித்து வருகிறார். அங்கே தனது யூட்யூப் சேனலில் பேட்டியளித்துள்ள அவர் மேற்கத்திய நாடுகள் உட்பட பிற இஸ்லாமிய மதத்தை அரசு மதமாக ஏற்றுக் கொள்ளாத நாடுகளை விட இந்தியாவில் தான் முஸ்லிம்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
"பொதுவாக இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமை இஸ்லாமிய நாடுகளில் இருப்பதைப் போல் தான் இருக்கிறது. அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. அங்கே வாழ்வதை அனுமதிக்கலாம். இந்தியாவைப் போன்றே முஸ்லிம்களுக்கு உரிமைகள் அனைத்தும் கிடைக்கும் மற்றொரு நாடு சிங்கப்பூர்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு குடி பெயர வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். "மலேசியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள். மலேசியாவில் இருந்து பிரிக்கப்பட்ட சிங்கப்பூரில் 20 முதல் 30 சதவீதம் முஸ்லிம்கள் சிங்கப்பூரிலும் இந்தியாவை போன்ற இஸ்லாமிய தனிநபர் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் சிங்கப்பூரை விட இந்தியாவில் அதிக சுதந்திரம் கிடைக்கிறது. மொரீஷியஸ் போன்ற வேறு சில இஸ்லாமிய மதத்தை அரசு மதமாக ஏற்காத நாடுகளும் உள்ளன. அவற்றிலும் இஸ்லாமிய தனிநபர் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.எனினும் இஸ்லாமிய மதத்தை அரசு மதமாக ஏற்காத நாடுகளில் இந்தியாதான் முஸ்லிம்கள் வாழ சிறந்த நாடு. இந்தியா முஸ்லிம்களுக்கு மிக பாதுகாப்பான நாடு. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் தான் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதற்குமுன் முஸ்லீம்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் தான் வந்தன" என்று தனது யூட்யூப் சேனலில் கூறியுள்ளார்.
பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தான் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் இரு அமைப்புகளும் இந்துத்துவத்தைப் பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகள் முஸ்லிம்களை கடவுள் வழிபாட்டில் ஈடுபட அனுமதித்தாலும் இஸ்லாமிய சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்ள இந்த நாடுகள் அனுமதிப்பது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். "மேற்கத்திய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் வைத்திருக்க முடியாது; நிக்காஹ் செல்லாது; ஷரியா சட்டத்தின் படி செய்யப்படும் விவாகரத்து அனுமதிக்கப்படுவதில்லை; வெளிப்படையாக இஸ்லாமிய மதத்தை பின்பற்ற முடியாது"என்று பேசியிருக்கிறார்.