சொந்த வீட்டிற்கே ஆபீஸ் என கணக்கு காட்டி பல லட்சங்கள் பில் போடுவதா? தி.மு.க ஐ.டி விங்கிற்கு எதிராக பொங்கும் உடன்பிறப்புகள்!

சொந்த வீட்டிற்கே ஆபீஸ் என கணக்கு காட்டி பல லட்சங்கள் பில் போடுவதா? தி.மு.க ஐ.டி விங்கிற்கு எதிராக பொங்கும் உடன்பிறப்புகள்!

Update: 2019-11-15 11:54 GMT

நேற்று நக்கீரன் இதழில் "மிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்? கொந்தளிக்கும் உடன் பிறப்புகள்." என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.


அதில் தி.மு.க-வில் ஐ.டி விங் என்பது பெயருக்கு தான் உள்ளது என்றும் தனிப்பட்ட முறையில் தி.மு.க-வை ஆதரக்கக்கூடியவர்கள், தி.மு.க ஐ.டி விங் குரூப்பில் இல்லாத தி.மு.க உறுப்பினர்கள்தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு சமூக ஊடகத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றும், மேலும் தி.மு.க ஐ.டி பிரிவு மாநில செயலாளர் PTR பழனிவேல் தியாகராஜன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு உறவினர் என்பதாலேயே அவர் சொல்வதை ஐ.டி. விங் நிர்வாகிகள் வேறு வழியின்றி கேட்டுக்கொள்கிறார்கள் என்றும் ஃபாரீன்ல படிச்சோம், ப்ளைட்டில் போனோம் என்ற நினைப்பிலேயே ஐ. டி விங் தலைமை இருப்பதால் அந்த விங் எப்போதும் பிளைட் மோடுலேயே இருக்கிறது என்றும் PTR பழனிவேல் தியாகராஜனை கடுமையாக சாடி இருந்தது.


இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். தி.மு.க ஐ.டி பிரிவின் மீது மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு அனைவரும் அதிருப்தியில் இருப்பதாகவும், குறிப்பிடத்தகுந்த செயல்பாடு இல்லை என்றும் கருதுவதாக தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் தியாகராஜனின் திமிரும், கர்வமும் தான் என குமுறுகின்றனர் உடன்பிறப்புகள். கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை சொந்த பணத்தை செலவு செய்து கட்சிக்கு பணியாற்றுகிறான், ஆனால் இந்த பரம்பரை பணக்காரரோ சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள தனது சொந்த வீட்டை தி.மு.க ஐ.டி விங்கின் அலுவலகமாக பயன்படுத்த கட்சியில் இருந்து லட்சக்கணக்கில் வாடகை வாங்கிக் கொண்டு இருக்கிறார் என கொதித்து எழுகின்றனர் அறிவாலய தி.மு.க மூத்த தலைவர்கள். மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு உறவினர் தியாகராஜன் என்ற காரணத்தினாலேயே தி.மு.க மூத்த தலைவர்களும் ஸ்டாலினிடம் இது குறித்து தொண்டர்கள் மனநிலையை வெட்டவெளிச்சமாக சொல்ல பயப்படுகின்றனர் என முடித்தார் சீனியர் உடன்பிறப்பு.


Similar News