அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க எம்.பி பார்த்திபன்! ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க அதிகாரிக்கு கொலைமிரட்டல்!
அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க எம்.பி பார்த்திபன்! ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க அதிகாரிக்கு கொலைமிரட்டல்!
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, சமூக காடுகள் வனச்சரக அலுவலர் திருமுருகன். இவர் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூன் 16 - ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மேச்சேரி யூனியன், பெரியசாத்தப்பாடி கிராமத்தில் உள்ள, கரடு பகுதியானது வருவாய் துறைக்கு சொந்தமான அரசு தீர்வை ஏற்படாத புறம்போக்கு நிலம். இந்த நிலம் வனத்துறையின் மூலம் மரம் நடுவதற்காக கடந்த 1961 - இல் வனத்துறைக்கு வழங்கப்பட்டது.
காமனேரி முதல் மேச்சேரி சாலையின் தெற்கு புறம் உள்ள இக்கரட்டுப் பகுதியில் 1962 - இல் 40.05 ஹக்டேரில் வனத்துறை மூலம் பல இனச் செடிகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. செடிகள் நடவு செய்வதற்கு முன்பும், பின்பும் இந்த கரட்டுப் பகுதிகளில் எந்தவித குடியிருப்புகளோ, நிலங்களோ இல்லை.
இப்பகுதியை, வனவர் வடிவேலுடன் கூட்டு களத்தணிக்கை மேற்கொண்ட போது, வேடன் கரட்டின் அடிவாரத்தில் இரும்பு கம்பத்தால் ஆன செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, அதில் தொடர்பு கொள்ள மொபைல் எண்: 83444 02838 குறிப்பிடப்பட்டிருந்தது. நான் ஜூன் மாதம் 18 - ஆம் தேதி காலை 10:00 மணியளவில் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு, “அரசு நிலத்தில் செக்போஸ்ட் ஏன் அமைத்துள்ளீர்கள். நீங்கள் யார்” என கேட்டேன். எதிர் முனையில் பேசியவர், “என்னுடைய பெயர் பழனிசாமி. காவலாளி. சேலம், தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனின் வேலையாள். குறிப்பிட்ட இடம் எம்.பி.க்கு சொந்தமானது, யாரையும் அனுமதிக்க முடியாது. அனுமதியின்றி உள்ளே நுழைந்தால், கை, கால்களை வெட்டிவிடுவோம். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், உள்ளே அனுமதிக்க கூடாது” என்று தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் கூறியதாக சொன்னார்.
அதன் பின் மாற்றுப்பகுதி வழியாக சென்று களத்தணிக்கை மேற் கொள்ளப்பட்டதில், கரட்டின் மேற்பகுதியில் சில விளை நிலம் இருப்பதும், அந்த விளை நிலங்களுக்கு செல்ல, கரட்டின் எல்லைப் பகுதியிலிருந்து, 167 மீட்டர் நீளத்துக்கு, ஒன்பது மீட்டர் அகலத்துக்கு மலையை குடைந்து, பல டன் கல், மண் வெட்டி கடத்தியதும் தெரிய வந்தது.
மேலும், வனத்துறைக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள, 200 - க்கும் மேற்பட்ட வேம்பு, புளியன், கருங்காலி, கருவேலன், வாகை, உசில், புங்கன், சீமை அகத்தி, சீமை வெல்வேல், தைலமரம் உள்ளிட்ட பலஜாதி மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டும், எவ்வித முன்அனுமதியும் பெறாமலும், அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.