நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வீடு திரும்பினார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி முதல் பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
மறுநாள் டெல்லியில் மறைந்த வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். இந்த ஓய்வில்லா அலைச்சலின் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. வயிற்றுப் பிரச்சினை மற்றும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து அவர் நேற்று வீடு திரும்பினார்.