ஈஷா சார்பில் இலவச பல்துறை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இருதய நோய், நரம்பியல், எழும்பு முறிவு உட்பட பல்வேறு விதமான நோய்களுக்கான இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் டிச.4, 5 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது.

Update: 2022-12-02 13:13 GMT

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இருதய நோய், நரம்பியல், எழும்பு முறிவு உட்பட பல்வேறு விதமான நோய்களுக்கான இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் டிச.4, 5 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது.

டிசம்பர் 4-ம் தேதி மத்வராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை, எழும்பு, தோல், பல், நரம்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

மேலும், முகாமின் சிறப்பம்சமாக, பொதுமக்கள் இருதய நோயாளிகளுக்கான 'எக்கோ' பரிசோதனை, மகளிருக்கான கர்ப்பப்பை பரிசோதனை, காது கேட்கும் திறனுக்கான பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம். அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும். முகாமில் பரிந்துரைக்கப்படும் நபர்கள் ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் சலுகை விலையில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

டிசம்பர் 5-ம் தேதி ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடைபெறும். அன்றைய தினம், மகளிருக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத பிரச்சினைகளுக்கான பரிசோதனை, அன்னப் பிளவு மற்றும் உதட்டுப் பிளவு உள்ள குழந்தைகளுக்கான பரிசோதனை, தீக்காயத்தினால் ஏற்படும் சுருக்கங்களுக்கான பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

இந்த 2 நாள் மருத்துவ முகாம்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபொலிஸ் சங்கம் ஆகியவை ஈஷாவுடன் இணைந்து நடத்துக்கின்றன. இதில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

Similar News