வாரணாசியில் மே 14 -ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல், மே13-ல் பிரம்மாண்ட ஊர்வலம்!

வாரணாசியில் மே 14-ஆம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

Update: 2024-05-09 18:26 GMT

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மே 14-ஆம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் .இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது .நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உ.பியில் வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாரணாசி எம்.பியாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ல் முடிவடைகிறது .இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார் .இதை ஒட்டி இதற்கு முதல் நாளிலிருந்து வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன .வாரணாசியின் மால் தஹியாவிலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு  தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வரும் 14ஆம் தேதியிலும் அதேபோல் பட்டேல் சிலைக்கு பிரதமர் மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒரு நாள் முன்னதாக மே 13 இல் பிரதமர் மோடி வாரணாசி வர உள்ளார். அதே நாளிலும் அவரது ரோடு ஷோ நடைபெற உள்ளது. பிரதமர் தனது வேட்பு மனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ் ராஜலிங்கம் உள்ளார் .வாரணாசியுடன் சேர்த்து உ.பியில் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலும்  தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.


SOURCE :Maalainilavu

Similar News