ஊழல் சகாப்தத்தை மாற்றி அமைத்து பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தை அடைந்த இந்தியா - மத்திய அரசின் சாதனை

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ஊழல் சகாப்தம் நிலவியது மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-08-23 07:15 GMT

மத்தியபிரதேச மாநில தலைநகரம் போபாலில் உள்ள அரசு மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் பயிலரங்க நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது :-


சுதந்திர தின நூற்றாண்டையை நோக்கிய அமுத காலம் தற்போது நடந்து வருகிறது. முதல் ஆண்டிலேயே நல்ல செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. வளமை அதிகரித்துள்ளது. வறுமை குறைந்துள்ளது. நிதி ஆயோக் அறிக்கையை எடுத்துக் கொண்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டனர். வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை பார்த்தால் மக்களின் சராசரி வருமானம் ரூபாய் 4 இலட்சத்தில் இருந்து 9 ஆண்டுகளில் 13 லட்சம் ஆக இருந்திருப்பது தெரிகிறது.


மக்கள் குறைந்த வருவாய் பிரிவினரில் இருந்து அதிக வருவாய் பிரிவினருக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் அக்கறையுடன் வரி செலுத்துகின்றனர். ஏனென்றால் தங்களது பணம் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டில் ஊழல் சகாப்தம் நிலவியது. வங்கி கணக்குக்கு செல்வதற்கு முன்பு மக்களின் பணமும் உரிமைகளும் கொள்ளை அடிக்கப்பட்டது.


ஆனால் தற்போது மக்களின் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக போய் சேருகிறது. பணம் கசிவதை நிறுத்தியதால் ஏழைகளின் நலன்களுக்கு அதிக பணம் செலவிட முடிகிறது. அனைத்து துறைகளும் வலுவடைந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது, பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்

Similar News