மோடி அரசிடம் சரணடைந்த கெஜ்ரிவால்: விபூதி, குங்குமம் அணிந்து நிகழ்சிகளில் நல்ல பிள்ளையாக பங்கேற்பு!!
மோடி அரசிடம் சரணடைந்த கெஜ்ரிவால்: விபூதி, குங்குமம் அணிந்து நிகழ்சிகளில் நல்ல பிள்ளையாக பங்கேற்பு!!
சென்ற மக்களவை தேர்தல் வரை மோடியுடன் கெஜ்ரிவால் சிக்கல் நிறைந்த வகையிலேயே உறவை கடைப்பிடித்து வந்தார். தன் மீது மக்கள் நம்பிக்கை வைத்த நிலையில், கெஜ்ரிவால் அரசியல் ரீதியாக முதல் தவறை செய்தார். அவர், டில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதற்கு அவரிடம் எந்த காரணமும் இல்லை.தொடர்ந்து அடுத்த தவறை செய்த கெஜ்ரிவால், 2014-ல் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது, மோடிக்கு இணையாக கெஜ்ரிவால் அறியப்பட்டார். ஆனால், வாரணாசியில் கெஜ்ரிவால் படுதோல்வியை சந்தித்தார். மிகவும் கொள்கை பிடிப்புள்ளவராக அறியப்பட்ட கெஜ்ரிவால், பிரதமர் பதவி ஏற்க காத்திருக்கவில்லை. பொறுமையாகவும் இருக்கவில்லை. இது அவரது அரசியல் பெயரை பெரிதும் பாதித்ததாக அரசியல் சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.
டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகியதற்காக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து 2015 ல் டில்லி சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 67 ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அசைக்க முடியாத நபராக மோடி இருந்த கட்டத்தில், கெஜ்ரிவாலின் வெற்றி ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
டில்லிக்குள் மட்டும் ஆம் ஆத்மி செயல்பட்டால், கெஜ்ரிவாலுக்கு பிரச்னை இல்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாக ஆம் ஆத்மியிலிருந்து விலகிய அசுதோஷ் சுக்லா கூறியுள்ளார்.
அதற்கு மாறாக செயல்பட்ட கெஜ்ரிவால், அந்த அறிவுரையை கண்டுகொள்ளவில்லை. இப்போது, டில்லியில் தன்னை காத்து கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து விட்டார் என்றும் அதனால் தான் மோடியிடம் அவர் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார் என்கிறார்கள் டில்லி வட்டாரத்தில்.
ஒரு காலத்தில் அரசியல் எதிரியாக இருந்த கெஜ்ரிவாலுடன், தற்போது, மோடி சுமூகமான உறவை கொண்டுள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் அரை மணி நேரத்துக்கும் மேல் மோடியை சந்தித்த பிறகு, பா.ஜக., மீதான கெஜ்ரிவாலின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மோதல் குறைந்துள்ளதை காட்டும் வகையில் கெஜ்ரிவால், பா.ஜக., குறித்து கவனமாக பேசி வருகிறார். சமீப காலமாக, மத்திய அரசை எதிர்ப்பதையும், டில்லி விவகாரத்தில் மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசுவதையும் கெஜ்ரிவால் நிறுத்தியுள்ளார்.