போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் திடீர் சாவு - தொடர்கதையாகும் விசாரணை கைதி மரணங்கள்

சென்னை ஓட்டேரியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-09-30 10:15 GMT

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் .இவர் மீது வியாசர்பாடி ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இருபதாம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியரான பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டிலன் முன்பு நிறுத்தி இருந்த அவரது காரின் முன் பக்க கண்ணாடியை ஆகாஷ் கல்லால் அடித்து உடைத்தார். இதனை தட்டிக்கேட்ட பாலகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் தெரிகிறது. இது பற்றி ஓட்டேரி போலீசில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார்.


இது தொடர்பாக 21 ஆம் தேதி இரவு ஓட்டேரி போலீசார் ஆகாசை விசாரணைக்காக போலீஸ்நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்கா காயத்ரியை வரவழைத்து மறுநாள் ஆகாஷை போலீஸ் நிலையம் அழைத்து வரும்படி கூறி எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற ஆகாஷ் மேலும் குடித்துவிட்டு போதை மாத்திரைகள் தின்றதாக கூறப்படுகிறது. இதனால் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாசை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் போலீஸ் நிலையத்தில் அவரை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் ஆகாசின் உடலை வாங்க மறுத்தனர். போலீசார் மற்றும் டாக்டர்கள் சமாதானம் செய்ததால் உடலை வாங்கிச் சென்றனர். இது தொடர்பாக இணைய கமிஷனர் ரம்யா பாரதி துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி எழும்பூர் பத்தாவது குற்றவியல் நடுவர் லட்சுமி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.





 


Similar News