"புத்தரின் கொள்கைகள் மூலம் தீர்வு" பிரதமர் மோடி பேச்சு #Modi
"புத்தரின் கொள்கைகள் மூலம் தீர்வு" பிரதமர் மோடி பேச்சு #Modi
சர்வதேச புத்த கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தர்மசக்கர தின விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புத்தமதம் அன்பு, அமைதி, அகிம்சை, கருணையை போதிப்பதோடு ஏழைகள், பெண்களை மதிக்க வேண்டும் என்று போதிக்கிறது. புத்தரின் போதனைகள் சிந்தனையிலும், செயலிலும் எளிமையை போற்றுவதாக அமைந்து இருக்கின்றன.
புத்தர் சாராநாத்தில் மேற்கொண்ட முதல் பிரசங்கத்திலும் அதன்பிறகு கற்பித்த போதனைகளிலும் நம்பிக்கை, குறிக்கோள் என்ற இரு விஷயங்களை பற்றி பேசினார். அவற்றுக்கு இடையே இருக்கும் வலுவான தொடர்பை அவர் கண்டார்.
இன்றைய காலகட்டத்தில் உலகம் பெரும் சவால்களை சந்தித்து அவற்றுடன் போராடி வருகிறது. புத்தரின் கொள்கைகளும், கோட்பாடுகளும் கடந்த காலத்திலும் பொருத்தமாக இருந்தது. இன்றைய காலத்துக்கும் அது பொருந்துவதாக உள்ளது. இதேபோல் எதிர்காலத்திலும் பொருத்தமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் உலகம் சில புதுமையான சவால்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைள் மூலம் தீர்வு காண முடியும்.
புத்தரின் கோட்பாடுகள் ஒருவருக்கு ஊக்கத்தை அளித்து, சாந்தப்படுத்தக்கூடியது. மேலும் மனிதகுலத்துக்கு நல்வழியை காட்டக்கூடியது. எனவே இளைஞர்கள் தங்கள் மனதில் நிறுத்த வேண்டும். உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஊக்கம் மிகுந்த இளைஞர்கள் தீர்வு கண்டு வருகிறார்கள்.
புத்தமத தலங்களை இணைக்க நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் குஷிநகர் விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புத்த தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதற்கு இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.