ஒரு போதும் இந்துக்கள் என்பதை மறந்து விடக் கூடாது! கிருஷ்ணசாமி அதிரடி பேச்சு!
ஒருவர் கூட மதம் மாறக் கூடாது என்று தனது கட்சிக்காரர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்
நாம் இந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் இனி நம் மதத்திலிருந்து ஒருவர் கூட பிற மதத்திற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியுடனும் சத்திய பிரமாணம் செய்து கொண்டும். அதை கடைசி மூச்சு உள்ளவரை பின்பற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். அப்போது "நாம் இந்துக்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. உலகில் முன்னோடியான பழமையான மதம் இந்து மதம். இந்த மதத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
நம் இந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இனி, நம் இனத்தவர் ஒருவர் கூட பிற மதத்திற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியுடனும் சத்திய பிரமாணம் செய்து கொண்டும், அதை கடைசி மூச்சு உள்ளவரை பின்பற்ற வேண்டும்.!
— புதிய தமிழகம் கட்சி (@PTpartyOfficial) February 22, 2021
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி pic.twitter.com/VJbGtdAgRz
மேலும் "ஏழு சாதிகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் இனத்தில் இருந்ததால் ஒரு சிலர் மட்டுமே பயனடைந்து வந்தனர். அனைவரும் பயன் அடைந்தது இல்லை" என்று அவர் தெரிவித்தார். பட்டியல் இனத்தில் இருப்பதால் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்து வந்ததாகவும் இதனால் இந்து மதத்திலிருந்து பலர் வேறு மதத்தை ஏற்றுக்கொண்டு மதம் மாறியதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
"ஆனால் தற்போது பட்டியல் இனத்தில் இருந்து விடுபட்டுள்ளதால் நமக்கு இப்போது தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. நாம் அனைவரும் இந்து என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இனி நம் மதத்தில் இருந்து ஒருவர் கேட பிற மதத்திற்கு செல்லக் கூடாது என்று உறுதியுடன் சத்திய பிரமாணம் செய்து கொண்டு அதை கடைசி மூச்சு உள்ளவரை பின்பற்ற வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்து மதம் தான் தங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்றும் தங்களது நிலைக்கு இந்து மதம் தான் காரணம் என்றும் தாய் மதத்தைப் பற்றி ஒரு புறம் இழிவாகப் பேசிவிட்டு தலித்துக்களுக்கு மரியாதை கொடுக்காத ஆபிரகாமிய மதங்களை புகழ்ந்து பேசி மறைமுகமாக மத மாற்றத்தைத் தூண்டும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இந்து மதத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசியது மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.