தமிழகத்தில் அமுல் நிறுவனம்..! பச்சைக்கொடி காட்டிய பால் முகவர்கள் சங்க தலைவர்...
தமிழகத்தில் அரசு தரப்பில் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக விற்பனையாகி வருகின்ற அமுல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கு வரவேற்பு தருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து செயல்பட்டு வரும் அமுல் நிறுவனம் அதன் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சந்தைப்படுத்த ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பால் பண்ணை அமைத்து வருவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.
அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களை அண்டை மாநிலங்களில் உற்பத்தி செய்து ஏற்கனவே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சந்தைப்படுத்தி வரும் சூழலில் அவற்றோடு தற்போது கூடுதலாக 140கிராம் மற்றும் 450கிராம் அளவுள்ள தயிர் பாக்கெட்டுகளை ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், பலமனேரி எனுமிடத்தில் உள்ள பால் பண்ணையில் இருந்து உற்பத்தி செய்து ஆந்திரா, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் சந்தைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது போல் தமிழ்நாட்டில் பால் பண்ணை அமைத்து, பால் வணிகத்தில் ஈடுபடும் எண்ணம் அமுல் நிறுவனத்திற்கு இருக்குமானால் அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்க தயாராக இருக்கிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் சு. ஆ. பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Source : Junior Vikatan