ஆண்டாண்டுகளாக வடமாவட்டங்களில் சீரழியும் கல்வி நிலை - ராமதாஸ் வேதனை...!

Update: 2024-05-10 17:37 GMT

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. கடந்த வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது அதில் வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை இல்லாதவகையில் அளவுக்கு 94.56 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் துணைத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மிகவும் கவலையளிக்கும் உண்மை. இந்த ஆண்டும் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தான். திருவண்ணாமலை மாவட்டம் தான் தமிழ்நாட்டில் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. கடைசி 10 இடங்களைப் பிடித்த திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவள்ளூர் கிருஷ்ணகிரி காஞ்சிபுரம், இராணிப்பேட்டை திருப்பத்தூர். மயிலாடுதுறை. வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை காவிரி பாசன மாவட்டங்கள். மீதமுள்ள 5 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. 

கடந்த ஆண்டு கடைசி 15 இடங்களை பிடித்த மாவட்டங்களில் கடலூர், செங்கல்பட்டு ஆகியவை தான் ஓரளவு முன்னேற்றம் அடைந்து முறையே 22, 18 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நிலை கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல.கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை தான் காணப்படுகிறது. ஒருமுறை கூட வட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்தது இல்லை. அதேபோல், ஒருமுறை கூட கடைசி 10 இடங்களில் தென் மாவட்டங்கள் வந்தது கிடையாது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வட மாவட்டங்களும், சமூகநிலையில் வன்னியர்களும் முன்னேறாமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது தமிழ்நாட்டில் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதை உணர்ந்து, வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தைக் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News