அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா? சாலையில் ஓடிய பேருந்து சக்கரம்..! திமுகவை விளாசிய அன்புமணி!

Update: 2024-05-16 13:23 GMT

கடந்த சில நாட்களாகவே அரசு பேருந்துகளின் நிலைமையானது படுமோசமாக இருப்பது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் போக்குவரத்து கழகம் அரசு பேருந்துகளை சரி பார்க்கவும் சோதனை இடவும் நடவடிக்கை மேற்கொண்டது இருப்பினும் தற்போது ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் கழன்று சாலையில் ஓடியது. முன்புற சக்கரம் இல்லாமல் தடுமாறிய நகரப் பேருந்தை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினார்கள். சக்கரம் தனியாக கழன்று ஓடும் நிலையில் மிகவும் அலட்சியமாக அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டதற்கு, ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் மே 4-ஆம் தேதி வரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அதன்பின் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது என்றால் அரசுப் பேருந்துகள் பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? என்ற வினா எழுகிறது.

அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதும், பேருந்துக்கு வண்ணம் பூசி விட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாகவும் பொய்க்கணக்கு காட்டும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

Source : Asianet news Tamil 

Similar News