தொடரும் என்.ஐ.ஏ வேட்டை - தென்னிந்தியாவில் அதிகம் சிக்கும் தீவிரவாதிகள்
கர்நாடகத்தில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கர்நாடகத்தில் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க தேசிய புலனாய்வு முகமை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி அந்த அமைப்பினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பயங்கரவாத அமைப்புகளையும் ஆள் சேர்ப்பவர்களையும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகிறார்கள்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் மக்களாக இருக்கும் பயங்கரவாத 'ஸ்லீப்பர் செல்கள்'பற்றி உளவுத்துறை மூலம் தகவல்களை பெற்று அவர்களின் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அமைப்பினர் ரகசியமாக கண்காணித்து தக்க சமயத்தில் கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் ஸ்ரீ ராமபுரத்தில் உள்ள மசூதியில் பதுங்கி வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி தாலிப் உசேன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கூட பெங்களூரு நகரில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார் .இவர் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் தங்கியிருந்த இன்னொரு பயங்கரவாதியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 2 பேரையும் என்.ஐ .ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.