40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் : நிவாரணத் திட்டம் வேண்டும் - பா.ம.க தலைவர் ராமதாஸ்
40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் : நிவாரணத் திட்டம் வேண்டும் - பா.ம.க தலைவர் ராமதாஸ்
40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: நிவாரணத் திட்டம் வேண்டும்!
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவின் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலின் பக்கவிளைவுகளால் இந்தியாவில் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுவர் என கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களை விட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் மட்டும் தான் அமைப்பு சார்ந்தவர்கள்; மீதமுள்ள 90% தொழிலாளர்கள் அமைப்புசாராத தொழிலாளர்கள் என்பதிலிருந்தே கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்களின் வாழ்வில் எத்தகைய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம். உலக அளவில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் ஐந்தில் நான்கு பங்கினர், அதாவது 81 விழுக்காட்டினர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவார்கள் என பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு (ILO) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா, பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளில் தான் ஊரடங்கால் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ள பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு, இந்தியாவில் மட்டும் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வறுமையில் வாடக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதேநிலை இந்த ஆண்டு முழுவதும் நீட்டிக்கக்கூடும் என்றும், 2020-ஆம் ஆண்டின் இறுதியில் நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.