செய்யூர் சசிகலா கொலை வழக்கில் தப்பிக்க முயற்சிக்கும் தி.மு.க இளைஞரணி தேவேந்திரன் - வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சசிகலா தாயார் மனு.! #Sasikala #DMK #Devendren #Cengalpattu

செய்யூர் சசிகலா கொலை வழக்கில் தப்பிக்க முயற்சிக்கும் தி.மு.க இளைஞரணி தேவேந்திரன் - வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சசிகலா தாயார் மனு.! #Sasikala #DMK #Devendren #Cengalpattu

Update: 2020-07-22 02:42 GMT

தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தூண்டுதலால் தற்கொலை செய்துகொண்ட சசிகலா வழக்கில் செய்யூர் போலீஸார் விசாரணை முறையாக இல்லாததால், சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சசிகலாவின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24-ம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செய்யூர் போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி தற்கொலைப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் அருண்பாபு தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்தார். திமுகவைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் தன் தங்கையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதாகப் புகார் கூறியிருந்தார்.

சசிகலா குளிக்கும்போது தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகிய இருவரும் செல்போனில் படம் பிடித்து, அந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

இதனால் ஒழுக்கக்குறைவாக நடந்ததாக திமுகவிலிருந்து தேவேந்திரன், புருஷோத்தமன் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது செய்யூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகள் சசிகலாவின் மரண வழக்கை செய்யூர் போலீஸார் விசாரிக்கக்கூடாது, சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சசிகலாவின் தாயார் சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "சசிகலா மரணம் தொடர்பான வழக்கில் தற்கொலைக்குத் தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முறையாக இல்லை. என் மகளை ஆபாச வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்தது, வன்கொடுமை செய்தது, மரணம் விளைவிக்கக் காரணமாக இருந்தது போன்ற பிரிவுகளிலோ பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்திலோ இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியை செய்யூர் போலீஸார் செய்து வருகின்றனர். ஆகவே, சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இருவரையும் குண்டர் சட்டத்தில், அடைப்பதற்குப் போதிய முகாந்திரம் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Similar News