சி.பி.சி.ஐ.டி-க்கு மாறிய எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலைகள் : அவிழ்க்கப்படுமா மர்ம முடிச்சுகள்? #SRMSuicides
சி.பி.சி.ஐ.டி-க்கு மாறிய எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலைகள் : அவிழ்க்கப்படுமா மர்ம முடிச்சுகள்? #SRMSuicides
சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இதனால் இவர்கள் தங்குவதற்காக ஹாஸ்டல் வசதியும் உள்ளது.
இந்த பல்கலைகழகத்தில் கடந்த மாதம் அனுப்பிரியா என்ற பிடெக் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மாணவி, 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர், 2 – வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
உண்மையில் இவை கொலையா? அல்லது தற்கொலையா? என்ற மர்ம முடிச்சு இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. மரணம் தான் மர்மமாக உள்ளது என்றால் இவை தொடர்பான விசாரணையும் மர்மமாகத்தான் உள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஒரு தற்கொலை அரங்கேறி உள்ளது. இதுவும் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் கூறப்படுகிறது. அந்த மாணவன் பெயர் ராகவன். கன்னியகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. ஐடி பிரிவில் 4 – ஆம் வருடம் படித்து வந்தவர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாணவ, மாணவியர் 3 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இது தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஆனால் எந்த ஊடகத்திற்கும் இதுபற்றிய தகவல் கிடைக்கவில்லை போலும்.
இந்த நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து சிபிசிஐடி விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.