சுனில், பி.டி.ஆர் வெளியே; பிரஷாந்த் கிஷோர் உள்ளே? - தி.மு.க பவர் பாலிடிக்ஸ்!
சுனில், பி.டி.ஆர் வெளியே; பிரஷாந்த் கிஷோர் உள்ளே? - தி.மு.க பவர் பாலிடிக்ஸ்!
தி.மு.க-வின் முக்கியப்புள்ளியாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் வலது கரமாக செயல்பட்டு வந்தவர் சுனில். பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வரும் அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோரிடம் பணியாற்றிய சுனில், கடந்த 2015-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பணி புரிய ஆரம்பித்ததாக ஊடக மற்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தற்போது திமுகவின் அரசியல் யுக்தியை உருவாக்கி செயல்படுத்தும் பணி, OMG என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள், ட்வீட்டுகள் போன்ற அனைத்தையும் முடிவு செய்வது இந்த டீம்தான். இந்த டீமில் சுனில் முக்கிய நபர், இவர் வேலுவின் ஆள்" என சவுக்கு ஷங்கர் கடந்த வருடம் எழுதிய திமுகவின் மண்டகசாயம் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க மூத்த தலைவர்களுக்கெல்லாம் இல்லாத அணுகல்(access) சுனிலுக்கு மு.க.ஸ்டாலினிடம் இருந்தது என தி.மு.க வட்டாரங்கள் வருடக்கணக்கில் பேசி வந்தன. எப்போது வேண்டுமானலும் தொடர்பு கொள்ளலாம், தேர்தல்களின் போது வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு, எந்தெந்த வேட்பாளர் எந்த யுக்தியை கையாள வேண்டும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும், எங்கு செலவழிக்க வேண்டும் என்ற வானளாவிய அதிகாரத்துடன் தி.மு.க-வின் அதிகார மையத்தில் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்தவர் சுனில்.
மு.க.ஸ்டாலினும், தி.மு.க மேல்மட்டமும் அவரை வெகுவாக நம்பி அனைத்து மரியாதையும் கொடுத்தது மட்டுமின்றி, மாத சம்பளமாக மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சுனிலின் நடவடிக்கைளில் லேசாக சந்தேகம் கிளம்பவே, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், இணைச்செயலாளர் அன்பில் மகேஷ் மற்றும் குழுவினர் அவரை கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது சுனில் ஆளும் கட்சி மேல்மட்டத்தில் நெருங்கிய தொடர்புடன் இருந்ததும், தினமும் அவர்களுடன் வேறொரு எண்ணில் இருந்து தொடர்புக் கொண்டு பேசி வந்ததும் தெரிய வரவே அதிர்ச்சியல் மூழ்கியது அறிவாலய மேல்மட்டம் என அறிவாலயத்தில் இருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்கு தெரிவித்தன.