சென்னை-சேலம் 'பசுமை வழி சாலை திட்டம்' - 2025'க்குள் முடிக்க அதிரடி திட்டம்
சென்னை-சேலம் இடையிலான எட்டு வழி சாலை திட்டம் 2025ம் ஆண்டிற்குள் முடிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
சென்னை-சேலம் இடையிலான எட்டு வழி சாலை திட்டம் 2025ம் ஆண்டிற்குள் முடிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
மத்திய அரசின் 'பாரத் மாலா யோஜனா' திட்டத்தில் சென்னை-கொச்சி துறைமுகங்களை இணைக்கும் வகையில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதில் முதல்கட்டமாக சென்னை தாம்பரம் அருகே படப்பையில் துவங்கி சேலம் வரையிலான 276.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டத்தை அமல்படுத்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 25'ம் தேதி 2018ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நில அளவீடு பணி துவங்கிய நிலையில் விவசாயிகள் எதிர்ப்பு தீவிரமானது அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், சில திரைத்துறையினரும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த திட்டம் நிறைவேற்றாமல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த திட்டம் துவங்கக் கூடாது என விவசாயிகள் போர்வையில் சில அரசியல் கட்சியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீண்டும் 2019 மே 27-ஆம் தேதி மேல்முறையீடு செய்தது அத்துடன் 'எட்டு வழி சாலை திட்டம்' என்பதை 'மத்திய அரசு பசுமை வழி சாலை திட்டம்' என்றும் 'பாரத்மாலா யோஜனா திட்டம்' என்பதை 'சாகர்மாலா திட்டம்' என்றும் மாற்றம் செய்தது.