பல்லவ சிற்பக்கலை குறித்து மோடி விவரித்ததை சீன மொழியில் ஸி ஜின்பிங்கிற்கு புரிய வைத்த தமிழர் இவர்தான்!

பல்லவ சிற்பக்கலை குறித்து மோடி விவரித்ததை சீன மொழியில் ஸி ஜின்பிங்கிற்கு புரிய வைத்த தமிழர் இவர்தான்!

Update: 2019-10-13 05:56 GMT

மாமல்லபுரத்தின் சிற்பக்கலைச் சிறப்புகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் சொல்லச் சொல்ல, அதை மாண்டரின் மொழியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு மொழி பெயர்த்துச் சொன்னவர் மதுசூதன் ரவீந்திரன் என்ற இந்தத் தமிழரே.


தமிழகத்தில் பிறந்த இவர், கோவையை சேர்ந்த இவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். பின் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், இந்திய வெளியுறவுச் சேவை (IFS) அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.


2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட ஈராண்டு காலம் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாம் நிலை, பின் இரண்டாம் நிலைச் செயலராகப் பணியாற்றிய மதுசூதன், பின்னர் 2011 ஆகஸ்ட்டில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றினார்.


அப்போது, கலிஃபோர்னியாவிலுள்ள மாண்ட்ரி அனைத்துலகக் கல்விக் கழகத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் உரை பெயர்ப்பில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.


பின்னர் 2013 ஜூலையில் மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட இவர், இரண்டாம் நிலைச் செயலராகவும் பின் முதல் நிலைச் செயலராகவும் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தார்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்திய வெளியுறவு அமைச்சு அலுவலகத்தில் துணைச் செயலராக இருந்து வருகிறார்.


தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, சீனம் என ஐந்து மொழிகளில் புலமைமிக்க இவர், கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஜின்பிங்-மோடி சந்திப்பின்போதும் மொழி பெயர்ப்பாளராகச் செயல் பட்டது நினைவு கூறத்தக்கது.


மதுசூதன் ரவீந்திரனுக்கு சென்னை தமிழர் என்பதால் மாமல்லபுரம் குறித்த அனைத்து சிறப்புக்களை அறிந்தவர். மேலும் இவர் குறித்து ஏற்கனவே அங்குள்ள இந்திய தூதரகத்தில் கமிஷனராக பணியாற்றிய தற்போதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தெரியும் என்பதால் மதுசூதனின் மொழி பெயர்ப்பு திறமையை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.   


Similar News