கொரோனா பரவலை தடுக்க ஏன் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்?
கொரோனா பரவலை தடுக்க ஏன் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்?
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்
இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 19 நாட்கள் ஆகும் நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமூக இடைவெளி இல்லாத மனித நடமாட்டம் கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதை தடுக்க வாய்ப்புள்ள மாற்று நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது கட்டாயமாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 8,380 ஆகவும், தமிழக அளவில் 969 ஆகவும் இருந்தது. அதேபோல், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த 9&ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 169 ஆக இருந்தது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இரு நாட்களில் இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 118 அதாவது 69.82% அதிகரித்துள்ளது. இது மிக மிக கவலையளிக்கக்கூடிய புள்ளிவிவரம் ஆகும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில், உயிரிழப்புகளின் விகிதம் 1.03% ஆகும். அதேநேரத்தில் இந்தியாவில் இந்த அளவு 3.42 விழுக்காடாக உள்ளது. இது உலக சாராசரியை விட அதிகம் ஆகும். உலக அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் நிகழ்ந்த 63 நாடுகளில், 35 நாடுகளை விட அதிக விழுக்காட்டிலான உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவின் உயிரிழப்பு விகிதமும் (3.85%), இந்திய உயிரிழப்பு விகிதமும் (3.42%) கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. கனடா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் மிகவும் அதிகம் ஆகும். இந்திய உயிரிழப்பு விகிதம் பாகிஸ்தானை விட இரண்டரை மடங்காகவும், நார்வேயை விட இரு மடங்காகவும் உள்ளது. சீனாவின் உயிரிழப்பு விகிதத்தை இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது.