"ஸ்டாலின் கௌரவம் பார்க்காம பிரதமரிடம் தடுப்பூசி கேட்க வேண்டும்" - செல்லூர் ராஜூ அட்வைஸ்!
"முதல்வர் ஸ்டாலின் கெளரவம் பார்க்காமல் பாரதப்பிரதமரை நேராக சென்று சந்தித்து இருக்க வேண்டும், மத்திய அரசிடம் தடுப்பூசி பெறுவதில் சாணக்கியத்தனமாக தமிழக அரசு நடந்துகொள்ள வேண்டும்" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், அய்யப்பன் ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மதுரை மாநகர் மற்றும் கிராமப்பகுதிகள் ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சல் கண்டறியப்பட வேண்டும், கபசுர குடிநீர், மருந்துள், சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். மளிகை பொருட்களை தாராளமாகவும், மலிவு விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் அதில், "தமிழகத்தில் தடுப்பூசி அதிகமாக கிடைக்க வேண்டும். கொரானா உயிரிழப்புகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அ.தி.மு.க'வினர் தங்கள் கெளவரத்தை எப்போதும் பார்த்தில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலு மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். முன்னாள் முதல்வரும் துணை முதல்வரும் கெளரவம் பார்க்காமல் மத்திய அரசிடம் தேவையான உதவிகளை கேட்டுப்பெற்றனர். மத்தியில் உள்ள காங்கிரஸ் பா.ஜ.க என எல்லா ஆட்சியோடும் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றோம். இதனால் எங்களை தி.மு.க'வினர் அடிமை அரசு என விமர்சிக்கவும் செய்தனர்.
மத்திய அரசிடம் தடுப்பூசி பெறுவதில் சாணக்கியத்தனமாக தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும், கொரானா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதலில் மாநில முதல்வர் என்பவர் கெளரவம் பார்க்க கூடாது. கொரானா நடவடிக்கைகளுக்காக தடுப்பூசி பெற ஸ்டாலின் பாரத பிரதமரை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும், அப்போது மக்கள் ஸ்டாலினை பாராட்டியிருப்பார்கள், அதை விட்டுவிட்டு கொரானா மருத்துவமனைக்கு பி.பி.இ கிட்டுடடன் செல்வதை பெரிதாக பேசுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.