பிரதமர் நரேந்திர மோடி இன்று, பொது-தனியார் கூட்டாண்மை முறை மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலகளாவிய சந்தைக்கு விவசாயத் துறையை விரிவு படுத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார். வேளாண் துறைக்கான பட்ஜெட் ஏற்பாடுகள் குறித்து ஒரு வெபினாரில் உரையாற்றிய அவர், உணவு பதப்படுத்தும் துறையில் புரட்சியைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அறுவடைக்கு பிந்தைய புரட்சி அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி நாட்டிற்கு தேவை என்றும், 21 ஆம் நூற்றாண்டில் மதிப்பு கூட்டல் இந்திய விவசாயத்துறைக்கு அவசியம் தேவை என்றும் அவர் கூறினார்.
12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் கிராமப்புற பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்ளனர் என்றும் அவர் கூறினார். நாட்டின் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, "அறுவடைக்கு பிந்தைய புரட்சி அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி மற்றும் மதிப்பு சேர்த்தல் தேவை. 20-30 ஆண்டுகளுக்கு முன்னரே உணவு பதப்படுத்துதலில் இந்தியா கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டில் விவசாய கடன் இலக்கை ரூ 15 லட்சம் கோடியிலிருந்து ரூ 16.5 லட்சம் கோடியாக உயர்த்துவது உட்பட அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். பட்ஜெட் விதிகளை திறம்பட செயல்படுத்துவது குறித்து அவர் வலியுறுத்தினார்.
உணவு பதப்படுத்தும் துறையை விரைவாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். உணவு பதப்படுத்தும் புரட்சிக்கு, விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் பொது தனியார் கூட்டாண்மை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றார். வேளாண் துறையில் ஆர் அன்ட் டி நிறுவனத்திற்கு பொதுத்துறை முக்கியமாக பங்களிப்பு செய்துள்ளது என்றும், இப்போது தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் கூறினார்.