இஸ்லாமியர்களுக்காக அம்பேத்கர் சிலையையே அகற்றச் சொன்ன திருமாவளவன்.!

இஸ்லாமியர்களுக்காக அம்பேத்கர் சிலையையே அகற்றச் சொன்ன திருமாவளவன்.!

Update: 2020-11-04 16:27 GMT

தாழ்த்தபப்ட்டோரின் காவலராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருமாவளவன் எப்போதும் தி.மு.கவின் அடியாளாகவே செயல்பட்டு வந்திருக்கிறார். சமீபத்திய மனு தர்ம எதிர்ப்பு பிரச்சாரம் கூட தி.மு.கவின் ஏவலில் நடக்கும் நாடகம் தான் என்பதே தமிழக அரசியலை உற்று நோக்கி வரும் பலரின் கருத்தாக இருக்கிறது. தி.க மற்றும் பெரியாரிய இயக்கங்கள் பொதுவாக இந்து எதிர்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் அவை அவ்வளவாக மக்களை சென்றடையாததாலும் தி.மு.க நேரடியாக இந்து எதிர்ப்பு அரசியலில் இறங்குவது அவ்வளவு உசிதமில்லை என்பதாலும் எம்.பி சீட்டுக்காக அண்டிப் பிழைக்கும் திருமாவளவனை வைத்து "சனாதனத்தை வேரறுப்போம்", "மனு தர்மத்தைக் கொளுத்துவோம்" என்று மறைமுகமாக இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் இத்தகைய பிரச்சாரங்கள் இந்து எதிர்ப்பு மட்டுமே என்றும் பிற மதங்கள் என்று வரும் போது பெயருக்கு வைத்திருக்கும் கொள்கையைக் கூட கடாசுபவர்கள் தான் திருமாவளவனும் ஸ்டாலினும் என்பதற்கு உதாரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூரலாம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பழையபட்டிணம் என்ற ஊர். சம்பவம் நடந்த சமயத்தில் அங்கு சற்றேறக்குறைய 200 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களும் 35 இஸ்லாமிய குடும்பங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இருந்த ஊரில் நூலகத்துக்கு முன் அம்பேத்கர் சிலை ஒன்றை நிறுவ கிராம சபைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் வந்த பஞ்சாயத்துத் தேர்தலில் அப்துல் என்பவர் போட்டியிட்டு தோற்றிருக்கிறார். தன்னுடைய தோல்விக்குக் காரணம் தலித் மக்கள் தான் என்ற கோபத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது பிடிக்காமல் பிரச்சினை செய்துள்ளார். சிலை வைக்கப்பட்ட இடத்துக்கும் இஸ்லாமியர் குடியிருப்புக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையிலும் இஸ்லாமிய மக்கள் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்கள் என்பதால் சிலையை நீக்க வேண்டும் என்று பிரச்சினை செய்திருக்கிறார்கள். சிலைக்கு மாலை, மரியாதை செய்ய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

 

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இனத் தலைவரிடம் சென்று முறையிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவரோ ஏன் வீண் பிரச்சினை என்று கூறி சிலையை அகற்றி தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பு பகுதியில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அது போதாதென்று எதேச்சாதிகாரப் போக்குடன் இஸ்லாமிய சமூகத்தினரை சமாதானப்படுத்த அறிக்கை வேறு விட்டிருக்கிறார். அறிக்கையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வார்த்தைகளே அந்த தலைவரின் இஸ்லாமிய ஆதரவு நிலைக்கு சாட்சி.

 

"இஸ்லாமிய மார்க்கத்தில் உருவ வழிபாடு ஏற்புடையது அல்ல என்பதாலும் இஸ்லாமிய மார்க்க உண்ர்வுகளைப் பாதிக்கிறது என்பதாலும் தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை 'தவ்ஹீத் ஜமாத்தின்' கோரிக்கையை ஏற்று தகுந்த மாற்று இடத்தில் வைப்பதற்கு இஸ்லாமியர்களுக்கு எல்லாவகையிலும் விடுதலை சிறுத்தைகள் முழு ஒத்துழைப்பையும் உதவிகளையும் அளிக்கும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது தெரிகிறதா யார் அந்த தலித் உரிமைக் காவலர் என்று? இந்த பயந்தாங்கொள்ளி தான் இன்று "சனாதனத்தை வேரறு, மனு தர்மத்தை எரி" என்று சக சமூகத்தினரைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்.

 

ஒரு சிலை வைக்கும் விஷயத்தில் கூட தனது சமுதாயத்தினருக்கே ஆதரவாக நிற்காத திருமாவளவன் தான் இந்து பெண்களைப் பாதுகாக்கப் போகிறாரா? முத்தலாக் வழங்குவதை குற்றமாக அறிவித்து மத்திய அரசு சட்டம் இயற்றிய போது ஷரியத் சட்டத்தின் மீது கை வைக்கிறார்கள் என்று போராட்டத்தில் குதித்த திருமாவளவனுக்கு இந்துப் பெண்கள் மீது மட்டும் இவ்வளவு கரிசனம் ஏன்? எல்லாம் தி.மு.கவிடம் எதிர்பார்க்கும் 'கிருப கிருப' தான்.

 

இந்த சம்பவத்தில் மற்றொரு முக்கிய விஷயம் அப்போது ஆட்சியில் இருந்தது தி.மு.க என்பது. சிலையை அகற்றுவதை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சமூக நீதியின் கலங்கரை விளக்கமான தி.மு.கவோ ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நடுநிசியில் காவலர்களைக் குவித்து தாழ்த்தப்பட்டோரை அவர்களது வீட்டை விட்டு வெளியேறக் கூட விடாமல் செய்து சிலையை அகற்றி தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதியில் இருந்த குளத்தில் மண் கொட்டி நிரப்பி அங்கே வைத்து விட்டது.

 

நீதிமன்ற உத்தரவை மீறுவதாக துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அவசரமாக தந்தி எல்லாம் கொடுத்தும் மறுநாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசுத் தரப்பில் 'ராஜா கலிபுல்லா' என்ற வழக்கறிஞர் ஆஜராகி இருக்கிறார். அவர், "தலித் மக்களை விருப்பப்பட்டு தங்கள் பகுதியில் சிலையை மாற்றி வைத்துக் கொண்டதாக" கூறுகிறார். இதன் பின்னர் உண்மையில் நடந்தது என்ன என்று அறிய ஊர் மக்களிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‌ அப்போதும் சாட்சி சொல்ல முயன்றவர்களை நீதிமன்றத்துக்கே செல்ல விடாமல் காவல் துறை மூலம் தடுத்திருக்கிறது தி.மு.க அரசு.

 

அதன் பின்பு அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன போது "இவர்கள் ஊர் மக்களே இல்லை. காசு கொடுத்து கூட்டி வந்திருக்கிறார்கள்" என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அரசு வழக்கறிஞர் கலிபுல்லா. இவ்வாறு பொய்யாக கட்டமைக்கப்பட்ட ஆவணங்கள் புனையப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் இறுதியாக உடைத்தெறிந்து அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்திலேயே நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் வேறு வழியில்லாமல் இறங்கி வந்திருக்கிறது தி.மு.க அரசு. இந்த சம்பவத்தில் இருந்தே தி.மு.கவும் வி.சி.கவும் சமூக நீதியைக் காப்பாற்றிய லட்சணம் தெள்ளத் தெளிவாகிறது.

Similar News