ஆளுநர் தமிழிசை கூறிய "இந்திய ஒன்றியம்" என்ற வார்த்தை திரிக்க கூடாது - மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கை!
ஆளுநர் தமிழிசை கூறிய "இந்திய ஒன்றியம்" என்ற வார்த்தை திரிக்க கூடாது என புதுச்சேரி மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கை விடுத்துள்ளார். அது பின்வருமாறு:
"நேற்றைய முன் தினம் (27-06-2021) புதுச்சேரி வரலாற்றில் குறிக்கப்பட்ட நாள். மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்களின் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள். மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப்பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வு நடந்தேறியது.
அத்தகைய பெருமைமிகு நிகழ்வில் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த பெருமையை மறைக்கும் அளவிற்கு "இந்திய ஒன்றியம்" என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும் பயன்படுத்தவில்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று துணை நிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம்பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம் என்று கூறினார்களோ அதேபோல் "Indian Union Territory of Pudhucherry" என்ற வாசகம் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு" என மிக அழகாக, வெகுகாலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த படிவம்தான் வெகுகாலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை "Indian Union Territory" என்கிறார்கள். அதாவது "இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு ".