30 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், அமலுக்கு வந்தது கையை மீறிப்போன அதிகாரம்!

30 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், அமலுக்கு வந்தது கையை மீறிப்போன அதிகாரம்!

Update: 2021-02-26 18:42 GMT
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. அண்மையில் புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரு அமைச்சர்கள் உள்பட 3 காங்கிரஸ் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. ஆளுநர் உத்தரவின் பேரில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பும் தோல்வியை தழுவியது.

இதையடுத்து, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமி கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவை  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால், அங்கு தேர்தல் நடந்து முடிவுகள் தெரியும் வரையில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Similar News