மிரட்டிப் பார்க்கும் கூகுள்..அசராத ஆஸ்திரேலியா.! என்ன நடக்கிறது?

மிரட்டிப் பார்க்கும் கூகுள்..அசராத ஆஸ்திரேலியா.! என்ன நடக்கிறது?

Update: 2021-01-24 07:30 GMT

ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் கூகுள், பேஸ் புக் நிறுவனத்திற்குமான தகராறு முற்றிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் அங்கே தான் காண்பிக்கும் செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால் ஆஸ்திரேலியாவில் அனைத்து பயனாளிகளும் கூகுள் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு செயலிழக்கச் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

 ஃபேஸ்புக்கும் இந்த பிரச்சினையில் இணைந்து ஆஸ்திரேலிய பயனாளிகளின் பேஸ்புக் கணக்கில் இருந்து அனைத்து செய்திகளையும் நீக்கி விடுவோம் என்று மிரட்டி உள்ளது. இரண்டு நிறுவனங்களும் தாங்கள் சொன்னதை நிறைவேற்றிக் காட்டினால், 19 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் கூகுளின் சர்ச் என்ஜினை பயன்படுத்த முடியாமலும், 17 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் தங்கள் கணக்கில் செய்திகளையும் காண முடியாது.

மாதக்கணக்கில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிராக கூகுளும் பேஸ்புக்கும் போராடி வருகின்றன. டிஜிட்டல் மீடியா செய்திகளால் வருகின்ற வருவாயை நியாயம் இல்லாமல் இந்த இரு நிறுவனங்களும் எடுத்துக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் அவர்கள் வெளியிடும் செய்திகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த மசோதா கூறுகிறது. 

கூகுளின் ஆஸ்திரேலிய தலைவர் மெல் செல்வா கூறுகையில் இது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும், வேறு ஒரு வழி இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து எங்கள் சேவைகளை நீக்கிக்கொள்ள கூகுள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தான் நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை உருவாக்கும். அது எங்கள் பாராளுமன்றத்தில் தான் நடக்கும். எங்கள் அரசாங்கத்தால் அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் விஷயங்கள் நடைபெறுகிறது. அதை ஒத்துழைத்து ஆஸ்திரேலியாவில் தொழில் செய்ய விரும்பும் நிறுவனங்கள் அங்கே வரவேற்கப்படும். ஆனால் மிரட்டல்களுக்கு நாங்கள் பதில் அளிக்க மாட்டோம்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை எப்படி நடந்தது? டிசம்பர் 2020 ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஊடக மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த மசோதாவின்படி கூகுள் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனமும் அங்கே உள்ள டிஜிட்டல் செய்தி அமைப்புகளுடன் வருகின்ற வருமானத்தை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்.

 ஏனெனில் இவர்களுடைய உள்ளடக்கங்களை இந்த இரு நிறுவனங்களும் தான் அதிகமாக பகிர்கின்றன. அதில் நியாயமான வருவாய்ப் பங்கீடு இல்லாமல் இருப்பதால் இதன் காரணமாக அங்கே பல பேர் வேலை வாய்ப்புகளை இழந்து, உள்ளூர் மற்றும் அந்தப் பிராந்திய செய்தி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட வேண்டிய நிலைமைக்கு ஆளானது.

 சில தகவல்களின் படி, இணையதளங்களில் வரும் விளம்பரத்திற்கு 100 டாலர்கள் செலவழித்தால் அதில் கூகுள் 53 டாலர்களையும், பேஸ்புக் 28 டாலர்களையும் எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் 19 டாலர்கள் மட்டுமே பதிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள் சப்ஸ்கிரிப்டீன் உத்திகளை கையாள தொடங்கினாலும் இது பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் சாத்தியமில்லை.

 ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஊடகத்துறையில் நிகழும் இத்தகைய பிரச்சனைகள் குறித்து 18 மாதங்கள் ஆய்வு நடத்திய பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இப்படி ஒப்பந்தங்களில் ஈடுபடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவும் பேஸ்புக் மறுத்துவிட்டால் 10 மில்லியன் டாலர் வரை அல்லது அவர்களின் வருடாந்திர ஆஸ்திரேலியா வருவாயில் 10 சதவிகிதம் அல்லது இதன் மூலம் அவர்கள் பெரும் பயனை விட மூன்று மடங்கு அதிகமான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். (எது அதிகமா) 

ஆனால் இந்த சட்டங்களை மீறி செயல்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தாலோ அல்லது அது நியாயமான வாதங்களை முன்வைக்க தவறினாலும் மட்டுமே இத்தகைய அபராதம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

Similar News