மஹாபாரத துரியோதனுக்கு அதிசய கோவில். தென்னிந்தியாவில் அமைந்திருக்கும் ஒரே கோவிலும் இதுவே.!

மஹாபாரத துரியோதனுக்கு அதிசய கோவில். தென்னிந்தியாவில் அமைந்திருக்கும் ஒரே கோவிலும் இதுவே.!

Update: 2020-11-17 06:39 GMT

தென்னிந்தியாவில் துரியோதனனுக்கு  என்று அமைந்திருக்கும் ஒரே கோவில் பெருவிருத்தி மலநாடா கோவில். இந்த கோவில் கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் குன்னத்தூர் தாலுக்காவில் பொருவழி கிராமத்தில் அமைந்துள்ளது.

மல நாடா என்பதன் அர்த்தம் மலை கோவில் என்பதாகும். மற்ற கோவில்களை போல இங்கே திருவுருவச்சிலை ஏதுவும் இல்லை. மலையிலிருந்து கீழ்நோக்கி பார்த்தால் தெற்கு மற்றும் மேற்கு புறத்தில் நிறைந்த நெல்வயல் வெளிகளை காணலாம். இங்கே இருப்பது மண்டபம் மட்டும் தான். எந்த திருவுருவச்சிலையும் இன்றி சங்கல்பத்தின் பெயரில் பக்தர்கள் இவ்விடத்தை வணங்கி செல்கிறார்கள்.

எனில், கடவுளே இல்லாத இந்த இடத்தில் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் யாரிடம் சென்று சேர்கிறது என்கிற கேள்வி எழும். இங்கே இருக்கும் சங்கல்ப மூர்த்தி மஹாபாரதத்தின்  முக்கிய கதாபாத்திரமான துரியோதனன்.

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த போது கவுரவர்களில் மூத்தவனான துரியன், அவர்களை தேடி கொல்லம் பகுதிக்கு வந்ததாகவும். அவனுடைய தாகத்தை போக்க அங்கிருப்போரிடம் தண்ணீர் கேட்ட போது மரியாதை நிமித்தமாக அவனுக்கு கள் போன்ற ஒரு திரவத்தை அந்த ஊர் மக்கள் வழங்கியதால், அந்த ஊர் மக்கள் மீதும் மன்னர் மீதும் அளப்பரியா அன்பு கொண்ட துரியன், அந்த ஊருக்கு பல நூறு ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய அளித்த தாக வாய்வழி வரலாறு கூறுகிறது.

மேலும் அவனுடைய ராஜ தர்மத்தின் படி, அந்த ஊரில் இருந்த இந்த மலையின் மீது அமர்ந்து அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக துரியன் தியானித்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்றளவும், இந்த நிலங்களின் மீது விதிக்கப்படும் வரியின் பெயர் துரியோதனன் என்றே வழங்கப்படுகிறது.

இந்த பகுதியில் வாழ்ந்த குருவா இனத்தவரே இந்த பகுதியை சுற்றியிருக்கும் பெரும்பாலான கோவில்களின் பூஜாரிகளாகவும் இருக்கிறார்கள். இந்த கோவிலில் வருடாவருடம் மலக்குடா என்ற விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தில் அதாவது மார்ச் மாதத்தின் மத்தியில் நடைபெறும்.

மேலும் இந்த கோவிலில் தங்கத்தால் ஆன கொடி ஒன்று உண்டு. இதனை சுவர்ண கொடி என்றழைகிறார்கள். இந்த கொடியை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்குமாயின் அது வீட்டிற்கு பல நன்மைகளை, அனுகூலங்களை பெற்று தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கொடியை எல்லா நாளும் தரிசிக்க முடியாது. சில குறிப்பிட்ட புனித தினங்களான கொடியேற்று நாள், மலகுடா மஹோற்சவம் தினம் போன்ற நாட்களில் மட்டுமே இதனை தரிசிக்க முடியும்.

Similar News