தூய்மைப் பணியாளர்களை மிரட்டும் வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் - கடுகடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள்!

Update: 2021-06-10 00:45 GMT

வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தடுத்து மிரட்டுகிறார் என்று வேலூர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள், அ.தி.மு.க நிர்வாகிகள்.

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.கவினர் சார்பில், நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதேபோல், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் இரண்டாயிரம் பேருக்குத் தலா பத்து கிலோ அரிசி மூட்டையை நிவாரணப் பொருளாக கொடுத்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில், வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அதிமுகவினர்  குற்றம் சாட்டியுள்ளனர். தூய்மைப் பணியாளர்களை மிரட்டி, அதிமுகவினர் கொடுக்கும் நிவாரண பொருட்களை வாங்கக்கூடாது என எச்சரித்துள்ளனர்.




 


வேலூர் தி.மு.க எம்.எல்.ஏவின், இந்தச் செயலை கண்டித்த அ.தி.மு.க-வினர் மீது, எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் காவல் நிலையங்களில்  பொய்ப் புகார் கொடுத்து அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் அப்பு தலைமையிலான நிர்வாகிகள், உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கக்கோரி வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அதில், தூய்மைப் பணியாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் என தினந்தோறும் ஏராளமானோருக்கு நாங்கள் உதவுகிறோம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் கட்சியினர் மீது பொய்ப் புகார் கொடுக்க வைக்கிறார் எம்.எல்.ஏ கார்த்திகேயன்" எனக் குறிப்பிட்டுள்ளனர். 

Similar News