டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகத்தில் கண்டறியப்படவில்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்!

Update: 2021-06-20 12:43 GMT

டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களும் தமிழகத்தில் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய வைரஸ்களை தடுப்பதற்கு அனைவரும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசாங்கம் சார்பாக தமிழகத்திற்கு புனேவில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்த 3 லட்சத்து 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டன. 


தடுப்பூசி சேமித்து மையத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், அடுத்த சில நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். 


தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும், மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்த நோய் தொற்று குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார். 3 வது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Similar News