"அதிகாரியா நானான்னு ஒரு கை பார்த்திடலாம்!"- சட்டவிரோதமாக மணல் அள்ளிய தி.மு.க பிரமுகர்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது திமுக பிரமுகருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியில் திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அப்போது, மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆரோக்கியசாமியின் அரசியல் அழுத்தம் காரணமாக பிடிபட்ட சில மணிநேரத்திலேயே மணப்பாறை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் ஊடகங்கள் வரை சென்ற நிலையில், ஆளும் கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என உத்தரவு வந்துள்ளது.
இதனையடுத்து நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கப்பட்ட வாகனங்களை தேடிச் சென்று மீண்டும் பறிமுதல் செய்து அதன் ஓட்டுனர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.