"தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது"- அயோத்தியா மண்டப வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கூறியது என்ன?

Update: 2022-04-27 07:30 GMT

"தனி நீதிபதி பின்பற்றிய நடைமுறையும், அறநிலையத்துறை பின்பற்றிய நடைமுறையும் தவறானது" என்று  அயோத்தியா மண்டபம் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி  கூறினார்.


சென்னை மேற்கு மாம்பலத்தில், கடந்த 1954'ஆம் ஆண்டு கட்டப்பட்ட அயோத்ய மண்டபம், ஸ்ரீ ராம சமாஜ் என்ற ஆன்மிக இயக்கம் மூலம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு தினமும் வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதை தரிசிக்க தினமும் பல பக்தர்கள் அயோத்திய மண்டபத்திற்கு வருகை தருகின்றனர்.


அயோத்திய மண்டபத்திற்கு பெரும்பாலான பக்தர்கள் சென்று வருவதால், இதனை இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அறிவிப்பை 2013 'இல் அறிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த மார்ச் மாதம்  நீதிமன்றம், அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றும் இந்து சமய அறநிலையத்துறையை எதிர்த்து தொடரப்பட்ட ஸ்ரீராம் சமாஜின் வழக்கை தள்ளுபடி செய்தது.


'ஸ்ரீ ராம் சமாஜ்' இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தனி நீதிபதியின் உத்தரவில் எந்த இடைக்காலத் தடையும் பிறப்பிக்க முடியாது" என்று கூறி வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.


இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை, அயோத்தியா மண்டபத்திற்க்கு ஒரு அதிகாரியை நியமித்து  கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது. 


மீண்டும் இந்த வழக்கானது தலைமை நீதிபதியின் அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. "எந்த காரணமும் இல்லாது வழக்கைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது" என்று தலைமை நீதிபதி  கூறினார். மேலும் இப்பிரச்சினை குறித்து அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.


இதனைத் தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

J Vikatan

Similar News