வடலூர்: 'வெளிநாட்டில் வேலை ' என்று சொல்லி பல நபர்களிடம் 12 லட்ச ரூபாய் மோசடி செய்த பாதிரியாரும் அவரது மனைவியும்!
வடலூரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் கூறி பல நபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடு முழுவதும் கிறிஸ்தவ பாதிரியார்கள் மத பிரச்சாரத்தை தாண்டி பல சட்டவிரோத முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தக்க உதாரணம் சமீபத்தில் பாதிரியார்கள் சிலர் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்திய சம்பவம்.
இதன் வரிசையில், கடலூர் மாவட்டம் வடலூரில் ஜோசப் ராஜா என்ற கிறிஸ்துவ பாதிரியார் மற்றும் அவரது மனைவியும், பல நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
வடலூர் ராகவேந்திர நகரில் பாதிரியார் ஜோசப் ராஜா மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். இவர்கள் புருஷோத்தமன் என்பவரிடம் 5 லட்ச ரூபாயும், வேப்பங்குறிச்சியை சேர்ந்த மணியரசன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாயும், பண்ருட்டியை சேர்ந்த ராஜ் சரணிடம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், வடலூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த பார்த்திபனிடம் மூன்று லட்சம், சூரி மதுராந்தகியிடம் ஒரு லட்சம் மற்றும் நெல்லிகுப்பத்தைச் சேர்ந்த பாலாஜியிடம் ஒரு லட்சம் ரூபாயும் பெற்று வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பொய் கூறினர்.
ஆனால் இவர்களில் யாரும் வெளிநாட்டிற்கு பாதிரியார் மூலம் அழைத்துச் செல்லப்படவில்லை.
பின்பு இது மோசடி என உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் ஜோசப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.