இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. உயிரிழப்புகளும் கூட அதிகமாக இருந்தது. பல்வேறு மாநிலங்களும் கொரோனா 2வது அலையை சமாளிக்கத் திணறின. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தினசரி வைரஸ் பாதிப்பு உச்சத்தைத் தொட்டது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக காணப்பட்டது.
ஒருபுறம் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றால், மறுபுறம் சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் லோக்கல் சர்கிள் என்ற அமைப்பு கொரோனா 2வது அலையை ஒவ்வொரு மாநிலமும் எப்படிக் கையாண்டது? என்பது குறித்து சர்வே நடத்தியது. கடந்த ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கொரோனா பரவலைச் சிறப்பாகக் கையாண்டதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா 2வது அலையைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டதாக 59% மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சுகாதார உட்கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று தான் தமிழ்நாடு. இதனால்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும்கூட கொரோனா 2ஆம் அலையைத் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கையாள முடிந்தது. கேரள அரசுக்கு 39% பேர் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம் டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கொரோனா 2வது அலையை மிக மோசமாகக் கையாண்டதாக அந்த சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.