'அம்பேத்கர் ஆசையை 70 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி' - இளையராஜாவுக்கு ஆதரவாக ஹெச்.வி.ஹண்டே!

Update: 2022-05-06 12:05 GMT

அம்பேத்கர் விரும்பியதை சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி என்று, இளையராஜாவின் கருத்துக்கு ஆரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹெண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இளையராஜா பிரதமர் மோடி குறித்து ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதாவது அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக கூறினார். இதற்கு தி.மு.க., தி.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க. இளையராஜா கருத்துக்கு ஆதரவாக நின்றது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே 94, இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இசைஞானி திரு. இளையராஜா அவர்கள், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை. 1949&ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக. திரு. ஷேக் அப்துல்லா அவர்கள், சாசன வரைவுக் குழுத்தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அணுகினார்.

இச்செயலைக் கண்டித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஷேக் அப்துல்லா அவர்களிடத்தில் ''பிரதமர் பண்டித் நேரு அவர்களுக்கு நீங்கள் தவறான யோசனைகளை கூறிக் கொண்டு வருகிறீர்கள். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதன் மூலமாக, அந்த மாநிலத்தில் எந்த தொழிற்சாலைகளும் வராது. வேலை வாய்ப்புகள் அறவே நீங்கி விடும்.

இதனால் காஷ்மீர் மக்களின் வாழ்க்கையும் பாழாகி விடும். இந்திய நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கின்ற நான் 370-வது சரத்தை அரசியல் சாசனத்தில் புகுத்துகின்ற தேச துரோக செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்'' என திட்டவட்டமாக கூறினார். பிறகு வேறு வழியில்லாமல், 17.04.1949 அன்று இந்த சாசன பிரிவை 306 ஏ ஆக திரு.என்.ஜி. அய்யங்காரால் சாசன சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆகவே 1949-ல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய பாரத பிரதமர் 2019ம் ஆண்டில் நிறைவேற்றினார். இது தான் வரலாறு. இன்றைய காங்கிரஸ் காரர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உரிமையை கொண்டாடுவதற்கு எந்த தகுதியுமில்லை. 1946-ல் மும்பை மாகாணத்திலிருந்து சாசன சபைக்குள் டாக்டர் அவர்களை வரவிடாமல் தடுத்தது. அன்றைய காங்கிரஸ் தலைவர் பண்டித நேரு அவர்களும், மும்பை மாகாணத்தின் முதல்வர் பி.ஜி.கேர் அவர்களும் தான். பிறகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கிழக்கு வங்காளத்தின் ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களுடைய உதவியால்தான் சாசன சபைக்குள் வரமுடிந்தது. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: India Today

Tags:    

Similar News