3 பல்புகள் கொண்ட மூதாட்டியின் வீட்டிற்கு "ரூபாய் 25,000 மின் கட்டணம்" - மின்துறையின் லட்சணமா இது?

Update: 2022-04-21 13:56 GMT

தமிழகத்தில் நேற்று இரவு பல மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது. இது பொதுமக்களைச்  சிரமம் அடையச் செய்தது. இதனால் தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க நீலகிரியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.


நீலகிரி, கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட சேரம்பாடி மின் பகிர்மான பகுதிக்குட்பட்ட மாதமங்களம் என்ற கிராமத்தில்,  'தேவகி' என்ற மூதாட்டி ஒருவர்  சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மூன்று பல்புகள் மட்டுமே மின்சாரத்தால் இயங்கி வருகிறது.

பத்து நாட்களுக்கு முன், தேவகியின் தொலைபேசிக்கு "மின்சார கட்டணம் 25 ஆயிரத்து 71 ரூபாய்" என்று குறுஞ்செய்தி  வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேவகியின் மகன் உடனடியாக இது குறித்து சேரம்பாடி மின்பகிர்மான அலுவலகத்தில் புகார் அளித்தார்.


ஆனால் பத்து நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும் மின் கட்டணம் 10 முதல் 15 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பலர் மின் பகிர்மான அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பலர் புகார் அளிக்கவே, உடனடியாக செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் "மாதமங்கலம் பகுதி மின் கணக்கீட்டாளர் ரமேஷ், வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கிடாமல், அவராகவே கணக்கிட்டு பதிவு செய்ததன் விளைவு தான் இந்த பிரச்சனை" என்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


"அரசு ஊழியரின்  அலட்சியத்தால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவது வருத்தத்திற்குரியது" என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.


J Vikatan

Tags:    

Similar News