தி.மு.க ஆட்சியில் துணைவேந்தர் பதவிக்கு 55 கோடி விலை? பரபரப்பான குற்றச்சாட்டுகள்.!

தி.மு.க ஆட்சியில் துணைவேந்தர் பதவிக்கு 55 கோடி விலை? பரபரப்பான குற்றச்சாட்டுகள்.!

Update: 2020-11-19 20:22 GMT

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும், அவர் நேர்மையாக பணியாற்றுவதால் அவர் பெயரை களங்கப்படுத்தும் வண்ணம் வேண்டுமென்றே பொய்க் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன என்றும் இந்த பிரச்சனை தொடங்கியதிலிருந்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறிவருகிறார்.

தற்போது துணைநிலை சூரப்பா மீது பொய்க் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் இந்த விஷயத்தில் அரசின் செயல்பாட்டை விளக்கும் வண்ணமும் அவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான வாகனங்களை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் பயன்படுத்தி வந்ததாகவும் அதை துணைவேந்தர் திரும்பப் பெற்றதாலும் அவர் அரசுக்கு வளைந்து கொடுத்து போகாததாலும் அவரை பிரச்சனையில் மாட்டி விட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாக கூறி அது பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஊழல் புகார் தெரிவித்து அளிக்கப்பட்ட கடிதமே போலியானது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது புகாரில் குறிப்பிட்ட பெயரில் அங்கு யாரும் இல்லை என்று தெரியவந்ததாகவும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

துணைவேந்தர் சூரப்பா பதவியேற்ற பின்னர் நியமனங்கள் எதுவுமே நடைபெறவில்லை என்ற நிலையில் பேராசிரியர் நியமனத்துக்கு அவர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

அரசு பணி நியமனங்களுக்கு அரசியல்வாதிகள் பரிந்துரை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது வழக்கம். இந்த வழக்கத்துக்கு துணைவேந்தர் சூரப்பா ஒத்து வராததாலேயே அவர் மீது பொய்யாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

பணி நியமனத்தில் நடக்கும் ஊழல் பற்றி பேசிய அவர், "கோவை பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் சுவாமிநாதன், ஜேம்ஸ் பிச்சை, கணபதி மற்றும் அண்ணா பல்கலை துணை வேந்தர்கள் ராஜாராம், மன்னர் ஜவஹர் போன்றவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள், விசாரணைகள் நடத்தி இருக்கின்றது.

ஆனால் அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், பணம் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சம பாகமாக பங்கிட்டு அளிக்கப்படுகிறது." என்று அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஊழல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உயர்கல்வித்துறை அவல நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அந்த காலகட்டத்தில் துணைவேந்தர் பதவியை பெற முன்னாள் துணை வேந்தர் ஒருவர் 55 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் இதனை மற்றொரு துணைவேந்தரும் ஒப்புக் கொண்டதாகவும் தி.மு.க ஆட்சியில் கல்வித் துறையில் நடந்த ஊழலை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

அந்த கால கட்டத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் மட்டுமே துணைவேந்தர் பதவியை பெற முடிந்தது என்றும் திறமைக்கும் நேர்மைக்கும் இடமில்லை என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News