மணல் கடத்துவதாக புகார் அளித்தவர் மீது கொலைவெறித் தாக்குதல்: போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயற்சி!

Update: 2022-04-28 12:11 GMT

சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உறவினர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மணல் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் கிராமத்தினருடன் சென்று கடந்த 4ம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டனர். அப்போது மணல் கடத்தும் பகுதியை வருவாய் துறையினருக்கு அம்பேத்கர் நேரில் அழைத்து சென்று காண்பித்துள்ளார். இது பற்றி தெரிந்து கொண்ட மணல் கடத்தும் கும்பல் அம்பேத்கர் மீது நேற்று கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவரை மீட்ட உறவினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லி அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். இதனை கண்ட போலீசார் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை அப்புறப்படுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மணல் கடத்துவதாக புகார் அளித்தவர் மீது இப்படி கொலை வெறித்தாக்குதல் நடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News