ஆசை காட்டி ஏமாற்றும் சீன செயலிகளை தடை செய்யுங்க.. ராமதாஸ் கோரிக்கை.!
பவர் பேங்க் ஆப், டெஸ்லா பவர் பேங்க் ஆப் என்ற பெயரில் செயல்பட்டு வரும் செயலிகள் வழியாக பணத்தை முதலீடு செய்த சென்னையைச் சேர்ந்த 37 பேர் மொத்த முதலீட்டையும் இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இதே போல் பலர் ஏமாந்திருக்கின்றனர்.
சீன செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மக்களின் வறுமை மற்றும் நிதி நெருக்கடியை பயன்படுத்தி கடன் கொடுத்து ஏமாற்றிய சீன நிறுவனங்கள், இப்போது அதிக லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சீன நிறுவனங்களிடம் ஏராளமானோர் ஏமாந்துள்ள நிலையில், மற்றவர்களும் சீன நிறுவனங்களின் சதி வலையில் சிக்கி ஏமாறுவதைத் தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்ட நிறுவனங்கள் புதுப்புது வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் சில சீன நிறுவனங்கள், இந்தியாவில் நிழல் நிறுவனங்களைத் தொடங்கி, அதன் செயலிகள் மூலம் முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பவர் பேங்க் ஆப், டெஸ்லா பவர் பேங்க் ஆப் என்ற பெயரில் செயல்பட்டு வரும் செயலிகள் வழியாக பணத்தை முதலீடு செய்த சென்னையைச் சேர்ந்த 37 பேர் மொத்த முதலீட்டையும் இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இதே போல் பலர் ஏமாந்திருக்கின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பட்டயக் கணக்காளர்களின் துணையுடன் நிழல் நிறுவனங்களையும், அவற்றின் பெயரில் வங்கிக் கணக்குகளையும் தொடங்குகின்றன. அந்த நிறுவனங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பணியாளர்கள், வங்கிக் கணக்குகளில் அதிகமாக பணம் வைத்திருப்போரின் விவரங்களை உத்தேசமாகத் திரட்டி அவர்களை தொலைபேசியில் அழைப்பர். தங்களின் வங்கிச் செயலிகள் மூலம் முதலீடு செய்தால், குறைந்த காலத்தில் அது இரட்டிப்பாகிவிடும் என்று ஆசை காட்டுவார்கள். அதை நம்பி சிலர் மிகச்சிறிய அளவில் முதலீடு செய்வார்கள். அவ்வாறு செய்யப்படும் முதலீடுகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்புத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும். அதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயலிகள் மீது நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர்கள் அதிக தொகையை முதலீடு செய்வர்; அவர்களின் ஆலோசனைப்படி அவர்களுக்குத் தெரிந்தவர்களும், நண்பர்களும் சம்பந்தப்பட்ட செயலிகள் மூலம் முதலீடு செய்வர். ஆனால், பெரிய தொகையை முதலீடு செய்தவுடன், அந்த பணத்தை வேறு கணக்குக்கு மாற்றும் நிறுவனங்கள், முதலீடு செய்தவர்களின் கணக்குகளை முடக்கி விடுகின்றன. இந்த முறையில் பலர் ஏமாந்திருக்கின்றனர்.