130 சிம் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாட்டு செல்போன் அழைப்பில் மோசடி: சென்னை கும்பல் சுற்றி வளைப்பு!

Update: 2022-11-25 03:24 GMT

தொலை தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் சென்னை தொலைபேசி உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் அமைந்தகரையில், சந்தேகத்திற்கு இடமான வீடு ஒன்றில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன.

இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணையதள கருவி போன்றவை கண்டெடுக்கப்பட்டன. சர்வதேச அழைப்புகளை தேசிய அல்லது உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவது தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதோடு தொலைத்தகவல் தொடர்பு சேவை வழங்குவோருக்கும் அரசு கருவூலத்திற்கும் இழப்பை ஏற்படுத்துவதும் ஆகும்.

இந்நிலையில், சென்னையில், சட்டவிரோத தொலைத்தகவல் தொடர்பு அமைப்புகள் செயல்பட்ட இரண்டு இடங்களை கண்டறிந்தபோது அவற்றிலிருந்து 4 சிம் கேட்வேகளும், பயன்படுத்தப்பட்ட சுமார் 130 பிஎஸ்என்எல் சிம் கார்டுகளும், சிம் கார்டிலிருந்து வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கு மாற்றுகின்ற 2 கருவிகளும், செல்பேசிகளும், இதர சில சாதனங்களும், தமிழ்நாடு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சட்டவிரோத செயல்களை செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

சர்வதேச அழைப்புகள், உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகளாக மாற்றப்பட்டு அல்லது செல்பேசிகளில் எண் எதுவும் காண்பிக்காமல் வரும் அழைப்புகள் குறித்து தொலைத்தகவல் தொடர்புத்துறைக்கு 1800 110 420 / 1963 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Input From: Indian Express 

Similar News